2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! 
அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு

 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை:
தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது.



 ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)
 மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.


 பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.


 
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5,451 இடைநிலை ஆசிரியர்களும், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 18,922 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலே ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.


 ஒவ்வொரு தாளிலும் எவ்வளவு பேர் தேர்ச்சி? தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
 முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேரில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.61%. இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேரில் 713 மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 0.19%. முதல் தாள், இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தாள்களையும் எழுதிய 57 ஆயிரம் பேரில் 83 பேர் மட்டுமே இரண்டு தாள்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

தேர்ச்சியடைந்தவர்களில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள்.
 முதலிடங்களைப் பிடித்த பெண்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.திவ்யா 150-க்கு 122 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தவர்களில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அருள்வாணி 150-க்கு 125 மதிப்பெண்ணும், கணிதப் பாடத்தில் தேர்வு எழுதியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.சித்ரா என்பவர் 150-க்கு 142 மதிப்பெண்ணும் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
 மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: ""வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால், இந்தத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணை எடுக்காதவர்களுக்கு (150-க்கு 90 மதிப்பெண்) மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதேபோல், தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.


 இதைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும். அன்றைய தினம் ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
 இந்தத் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வர்களுக்கு அனுப்பப்படும்.
 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இப்போதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் 26 ஆயிரம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் முடிவடையும் என்றார் அவர்.
 
முதல் தாள் தேர்வு எழுதியோர் :2,83,806 தேர்ச்சி: 1,735


 இரண்டாம் தாள் தேர்வு எழுதியோர் :3,83,616 தேர்ச்சி: 713

இரண்டு தாள்களையும் எழுதியோர் : 57,000 தேர்ச்சி: 83


 தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,76,763


 தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,448


 விடைத்தாளில் தவறுகளால் மதிப்பெண்ணை இழந்தவர்கள் 2,182
 
ஆண்டுக்கு இருமுறை தேர்வு


 சிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் ஒரு தேர்வும், டிசம்பரில் மற்றொரு தேர்வும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 இப்போதுள்ள அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதுபோல் விரைவில் இந்த அரசாணை ஆண்டுக்கு இருமுறை நடத்தும் வகையில் திருத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்தத் தேர்வை நடத்தும் யோசனையும் தேர்வு வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது.
 
2,182 பேருக்கு மதிப்பெண் குறைப்பு


  ஆக. 25: ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 1.50 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களில் பல்வேறு தவறுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு தவறுகளைத் திருத்த பல்வேறு வாய்ப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது.
 இந்த நிலையில், தேர்வு நாளன்றும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
 இதனடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு இரண்டு தாள்களிலும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் வினாத்தாள் புத்தக எண்ணைக் குறிப்பிடாதவர்களுக்கு 5 மதிப்பெண்ணும், தேர்வு எழுதும் பாடத்தைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், சரியான மொழிப்பாடத்தைக் குறிப்பிடாதவர்களுக்கு 2 மதிப்பெண் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறுகளால் முதல் தாளில் 685 பேருக்கும், இரண்டாம் தாளில் 1,497 பேருக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை எடுத்துச் சென்ற தேர்வர்கள் தகுதியிழந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
 அதேபோல், வேறு தேர்வு எண்ணை எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. சில தேர்வர்களின் கையொப்பங்கள் விண்ணப்பம், விடைத்தாளில் வெவ்வேறாக இருந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment