காலாண்டுத் தேர்வு கேள்வித்தாள்: தனியார் நோட்சில் முன்பே "ரிலீஸ்'


சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், கணிதம் மற்றும் அறிவியல் தேர்வின் கேள்வித்தாள், "சுரா' எனும், தனியாரின் நோட்சில் அச்சு பிசகாமல் இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இம்மாதம், 14ம் தேதி காலாண்டுத் தேர்வு துவங்கி, 25ம் தேதியுடன் முடிந்தது. அரசின் உத்தரவை அடுத்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை போல, பிற வகுப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக, ஒரே மாதிரியான கேள்வித்தாளும், ஒரே நாளில் தேர்வும் நடத்தப்பட்டன. காலாண்டுத் தேர்வில், ஏழாம் வகுப்பு கணிதத் தேர்வில், அரசு வழங்கிய கேள்வித்தாளை பார்த்த, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுரா நோட்சின் மாதிரித்தாளில் உள்ள கேள்விகள் பலவும், அச்சுப்பிசகாமல் அப்படியே கேட்கப்பட்டிருந்தன. இதையறிந்த சில பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம், அடுத்து வரும் அறிவியல் பாடத் தேர்வுக்கும், சுரா நோட்சில் உள்ள, மாதிரி கேள்வித்தாளில் உள்ளனவற்றை படிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அறிவியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த, 95 சதவீதம் கேள்விகள், சுரா நோட்சில் இருந்த கேள்விகளாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, நோட்சில் இருந்த, மாதிரி கேள்வித்தாளின் வரிசைப்படியே, அரசு கேள்வித்தாளிலும், வரிசைப்படுத்தி, அச்சு பிசகாமல் கேட்டிருந்தனர். தேர்வை எழுதிய மாணவர்கள், சுரா நோட்சை தேடி, கடை கடையாக அலைந்துள்ளனர். கிடைத்தவர்கள் வாங்கி வந்து, எஞ்சிய சமூக அறிவியல் தேர்வுக்கும் படித்துள்ளனர். 

ஆனால், சமூக அறிவியல் தேர்வு கேள்வித்தாள் முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனியார் நிறுவன நோட்சின், மாதிரி கேள்வித்தாளுடன், 95 சதவீதம் ஒத்துப்போகும்படி, காலாண்டுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்தது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு உதவியோர் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?.

No comments:

Post a Comment