அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை-11-11-2012.

சிதம்பரம்: நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது.

சம்பளம் குறைப்பது குறித்து, நான் மட்டுமே முடிவு செய்ய முடியாது. தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இன்று முதல், பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. மேலும் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மன வேதனை அடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால், குடும்பத்தினருக்கு புத்தாடை வாங்கவோ, பட்டாசு வாங்கவோ ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலை : கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட அண்ணாமலை செட்டியார், 1920ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், மீனாட்சி கல்லூரி துவங்கினார். பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 1928ல், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, 1929ம் ஆண்டு, ஒருங்கிணைந்த பல்கலைக்கழகமாக, தமிழக அரசின் நிதி உதவியுடன் மாறியது.
கல்வியில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வி மேதைகளை உருவாக்கியது. இங்கு படித்தவர்கள், உலக அளவில் பல துறைகளில், மிக முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர்.
பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த, பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, 17 ஆயிரத்து 609 ஊழியர்கள், நேரடியாகவும், பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment