வரும் கல்வியாண்டில் 26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள்.

சென்னை: "கல்வியில் பின் தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், வரும் கல்வியாண்டு முதல், மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்" என, மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையான கல்வி பெற, மாதிரிப் பள்ளிகள் துவங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வரும் கல்வி ஆண்டு முதல், 26 ஒன்றியங்களில், மாதிரி பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவற்றுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் வரை, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், மாதிரி பள்ளிகள் இயங்கும்.
இப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இசை, உடற்கல்வி, கணினி, ஓவிய ஆசிரியர்கள் என, 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் என, ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் உருவாக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment