மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரிந்து உதயமாகும் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம்.


 கடலூர் மாவட்டத்தில் 14-வது ஊராட்சி ஒன்றியமாக, 3 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரிந்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் உதயமாகிறது.

தமிழகத்தில் கடலூரை தலைமையிடமாக கொண்டு இருந்த தென்னாற்காடு மாவட்டத்தில் 34 ஊராட்சி ஒன்றியங்க்கள் இருந்தன. கடந்த 30-09-1993ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டமானது கடலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது விழுப்புரம் மாவட்டத்துடன் 21 ஊராட்சி ஒன்றியங்களும், கடலூர் மாவட்டத்துடன் 13 ஊராட்சி ஒன்றியங்களும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் உதயமான 19 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக மேலும் ஒரு ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமுஷ்ணத்தை தலைமையிடமாக கொண்டு ஏற்படுத்தபட்டுள்ளது. இது கடலூர் மாவட்டத்தின் 14-வது ஊராட்சி ஒன்றியமாகும்.
இப்புதிய ஊராட்சி ஒன்றியமானது காட்டுமன்னார்கோயில், கீரப்பாளயம், கம்மாபுரம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து உருவாக்கப்படுகிறது. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் காடுமன்னார்கோயில் ஒன்றியத்தில் 55 கிராம பஞ்சாயத்துகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 63 கிராமங்களும், கம்மாபுரம் ஒன்றியத்தில் 53 கிராமங்களும் அடங்கி உள்ளன. இந்த 3 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்தும் 10 முதல் 20 கிராமங்கள் பிரித்து ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்க உள்ளனர். எனவே புதிதாக உருவாகும் ஒன்றியத்தில் 40 முதல் 45 கிராமங்கள் வரை இடம்பெறும் என தெரிகிறது.

இதற்காக இந்த 3 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பிரித்து புதிதாக ஏற்படுத்தப்படும் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ள கிராமங்களில் பொதுமக்களிடமும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கருத்துக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றீயங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு தமிழக அரசின் ஒப்புதலுடன் எந்தெந்த கிராமங்கள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியிடப்படும்.  இந்த நடைமுறைகள் முடிய 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment