எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்.


புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஆன்-லைன் டிக்கெட் புக்கிங் செய்ய, இணையதளம் வசதி, ஸ்மார்ட் போன் இருந்தால் தான் பெற முடியும்.
இப்போது, மொபைல் போன்களை இந்தியா முழுவதும், 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.
சாதாரண மக்களும், ஆன்-லைனில் புக்கிங் செய்யும் வகையில், மொபைல் போனில் இருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துவக்கி வைத்துள்ளது. எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவு சேவையை நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்ஜூன கார்கே துவக்கி வைத்தார்
அப்போது அவர் கூறியதாவது: வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, முன்பதிவு மையங்களுக்கு வந்து, வரிசையில் காத்து இருக்கின்றனர். இதனால், ஒரு நாள் சம்பளத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்டர்நெட் வசதியில்லாத, மொபைல் போன்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை துவக்கியுள்ளோம். இதை அமல்படுத்துவதில் உள்ள சங்கடங்கள் படிப்படியாக குறைக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி.,யின் ஆன்-லைன் புக்கிங் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு, 45 சதவீதம் நடக்கிறது. இன்டர்நெட் வசதி இந்தியாவில், 10 சதவீதம் தான் உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர், 80 சதவீதம் உள்ளதால், எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவுக்கு, அதிக வரவேற்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார். 

எஸ்.எம்.எஸ்., டிக்கெட் புக்கிங் குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., சேர்மன் ராகேஷ் டான்டன் கூறியதாவது:
இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர், முதலில் ஐ.ஆர்.சி.டி.சி.,யில் தங்கள் மொபைல் போன் எண்ணை அனுப்பி, பதிவு செய்து கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு வங்கி அளிக்கும், "மொபைல் மணி அடையாள' எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்ட்டையும் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக, 139 மற்றும் 5676714 எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment