வரும் கல்வியாண்டில் அரசு பொதுத் 
தேர்வில் மாநில "முதல்' மாணவருக்கு
பரிசு. துறையூர் பள்ளி அதிரடி அறிவிப்பு.


துறையூர்: ""வரும் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு, 15 பவுன் தங்கம், கார் பரிசாகவும், மாணவரின் பெற்றோருக்கு தனியாக, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்படும்,'' என துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக்., பள்ளி சேர்மன் ராமமூர்த்தி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, "நல்ல தொடக்கத்தை நோக்கி' என்ற தலைப்பில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கு வரவேற்பு, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து பள்ளி சேர்மன் ராமமூர்த்தி பேசியதாவது:


சௌடாம்பிகா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு படிப்பு மட்டுமின்றி, ஆளுமை பண்பு, பண்முக திறன் வளர்க்க கற்றுத்தரப்படுகிறது. மேல்நிலைக்கல்வியை, இரண்டு ஆண்டில் விருப்பத்துடன் கடினமாக படித்தால், உயர்கல்வியை எளிதாக செலவின்றியும் படிக்கமுடியும். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள், உங்கள் பெற்றோர்கள் கூறுவதைக்கேட்டு நல்ல வழியில் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்.
உளியின் வலியை தாங்கும் கற்கள் மட்டுமே, நல்ல சிற்பமாக பிரகாசிக்க முடியும். கஷ்டப்பட்டு, நன்றாக படிப்பவரே வரும் கல்வியாண்டில் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராக பிரகாசிக்க முடியும்.

வரும் கல்வியாண்டில் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு, 15 பவுன் தங்கம் மற்றும் முதலிடம் பெற்று, நான்கு பாடத்தில் "சென்டம்' எடுத்தால், ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், மெடிக்கல் கட் ஆஃப், 200க்கு 200 பெறுபவருக்கு, 3 பவுன் தங்கம், இன்ஜினியரிங் கட் ஆஃப், 200க்கு 200 பெறுபவருக்கு, 2 பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும்.
இதுதவிர மாநில அளவில் முதலிடம் பெரும் மாணவரின் பெற்றோருக்கும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள் பைக் பரிசாக வழங்கப்படும். மாநில அளவில் இரண்டாமிடம் பெறுபவருக்கு ஒன்பது பவுன் தங்கம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ஆறு பவுன் தங்கம், மாவட்டத்தில் முதலிடம் பெறுபவருக்கு மூன்று பவுன் தங்கம், நான்கு பாடத்தில் சென்டம் எடுப்பவருக்கு நான்கு பவுன் தங்கம், மாநில அளவில் இரண்டாமிடம் பெறும் மாணவரின் பெற்றோருக்கு, 60 ஆயிரம் மதிப்புள்ள பைக், மாநில அளவில் மூன்றாமிடம் பெறும் மாணவரின் பெற்றோருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்படும்.
இதுதவிர மதிப்பெண் அடிப்படையில் சிறப்பு பரிசு வழங்கப்படும். பரிசுக்காக மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கை உயர்வடையும் இலக்குகளை நிர்ணயத்து, வெற்றிப்பெற்று சாதனையை நோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி இயக்குனர் பிரேமலதா, கரூர் திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சுமங்கலி செல்வராஜ் வாழ்த்தி பேசினர். பள்ளி சீனியர் முதல்வர் ராமசாமி வரவேற்றார். மேல்நிலைக்கல்வி முதல்வர் நல்லசிவம், ப்ளஸ் 1 மாணவர்களுக்கு பள்ளியில் கற்பிக்கும் முறைப்பற்றி கூறினார். விழாவில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளியின் மேல்நிலைப்பள்ளிக் கல்வி (மகளிர்) முதல்வர் ராஜாராம் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்.

No comments:

Post a Comment