தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி:அனைத்து பாடங்களுக்கும் 
"வழிகாட்டி'


மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர். ஆங்கிலத்தில் 1438 பேர் தோல்வியை தழுவியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. மொத்த தேர்ச்சி விகிதமும் பாதித்தது. பிளஸ் 2வில், இயற்பியல், கணிதம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 500 மாணவர்கள் வரை தோல்வியடைந்தனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.இதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவில், கணக்கு பதிவியல் பாட ஆசிரியர்களுக்கும், கல்வியாண்டு துவக்கத்திலேயே சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், திறன் குறைந்த மாணவர்களை ஆரம்பத்திலேயே கணக்கெடுத்து, அவர்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களால் சிறப்பு பயிற்சி அளிப்பது, வினாத்தாளுக்கான "புளு பிரின்ட்' அமைப்பை தெளிவுபடுத்தி, தேர்வு பயத்தை நீக்குவதற்கான உளவியல் பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டங்களை செயல்படுத்தி, கண்காணிக்க குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், ""பத்தாவது மற்றும் பிளஸ் 2வில், திறன் குறைந்த மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கவும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம், அனைத்துப் பாடங்களுக்கும் "சிறப்பு வழிகாட்டி' (கைடு) தயாரித்துத் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்ச்சி
விகிதத்தை அதிகரிக்க முடியும்,'' என்றார்.

No comments:

Post a Comment