அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்.

 அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல் சென்னை, நவ. 29- தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம், அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வோம்’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சனிக்கிழமை சென்னையில் மாபெரும் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கிற்கு தலைமையேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். கல்விக்கு அரசே பொறுப்பு அனைவருக்கும் தரமான கல்வி, சமமான கல்வி அளிக்காமல் நாடு வளராது. மக்கள் வாழ்க்கைத்தரம் உயராது. ஏழ்மை ஒழியாது. “அனைவருக்கும் கல்வி, வேலை” என்பதை ஆட்சியாளர் களும் முன்வைத்து அவ்வப்போது முழக்கமிடுகிறார்கள். ஆனால் நடப்பது என்ன? சரியான முழக்கத்தை முன்வைத்தால் மட்டும் போதாது. ஆள்வோர் உறுதியான திட்டத்தை உருவாக்கிட வேண்டும். உண்மையாக அதைஅமலாக்கிட வேண்டும். அரசுக்குத் தான் கல்வி அளிக்கும் பொறுப்பு உள்ளது. அரசுப்பள்ளிகள் மூலமாகத்தான் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முடியும். ஒருபுறத்தில் சுயநிதி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் ஒரு அரசு, அரசுப்பள்ளிகளை பாதுகாக்க முடியுமா? என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். இக்கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ம.ப.விஜயகுமார், தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், கல்வியாளர் பேராசிரியர் ச.மாடசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அரசு செய்ய வேண்டியது என்ன? இக்கருத்தரங்கில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட ; தாய்மொழி பயிற்று மொழியாக தொடர ஊக்குவித்திட வேண்டும்; ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு தேவை; அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும்; மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்; கல்வித்தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும் ; வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும்; ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்; மாநிலஅரசு உரிய நிதியை ஒதுக்கிட வேண்டும் ; பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும்; மத்திய கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும். இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்ப்பந்தித்து பெற வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளை எடுத்து அரசுப்பள்ளிகளை பாதுகாத்து ஏழை, எளிய, நடுத்தர குடும்பங் களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வியை உத்தரவாதப்படுத்திட வேண்டுமென இக்கருத்தரங்கம் மாநில அரசை வலியுறுத்துகிறது. தனியார் லாப வெறியை தடுத்து நிறுத்துக! ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டு, அரசுப்பள்ளிகளை காவு கேட்கும் பல்வகை தனியார் பள்ளிகளின் வணிக மயத்தையும், லாப வெறியையும் தடுத்து நிறுத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய அரசுப்பள்ளிகள் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கின் றன. இத்தருணத்தில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், கல்விப்பற்றும் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசுப்பள்ளிகளை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முன்வர வேண்டும் என இச்சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

No comments:

Post a Comment